Tuesday, October 16, 2012

வண்ணம் அற்றப் பூச்சி!


வண்ணச் சிறகுகளில்
வானவில்லை வசமாக்கி
வானம் தொட்டு வட்டமிட்டது
வசந்தகால வண்ணத்துப் பூச்சி..
திசைமாறிய பறவைகள் சில
இசைந்தாடிய வண்ணங்களைத்
தீண்டித் தீண்டித் திருடிய பின்
வண்ணமற்றுப் போனது வண்ணத்துப் பூச்சி..
கள்ளுண்ட வண்டுகள் சில
கசை வீசிப் பறந்ததில்
கண்ணாடிச் சிறகுகளையும்
கலைந்து நடந்தது வண்ணத்துப் பூச்சி..
உயிர் குடிக்கும் தேனீக்களிடம்
ஊண் கொண்டக் கால்களையும் உதிர்த்து
ஊமைப் புழுவாய் நகர்ந்தது
வண்ணம் அற்றப் பூச்சி..!!

Saturday, October 13, 2012

மெளனம்



நீ கடந்து போகும் நிமிடங்களில்
நம்முள் படிந்திருக்கும் மெளனம் உடைத்து
ஒன்று சொல்ல ஆசை..
“கடந்து போகாதே..மடிந்து போவேன்!”
கடந்து போகின்றாய் நீ..!
மடிந்து போகின்றன என் வார்த்தைகள்..!
‘வெற்றி’ - கொக்கரிக்கிறது மெளனம்..!!