Sunday, August 7, 2011

தேவதைகள் ஆண்டக் காலம்!


[கடைசியாக சொந்தக் கிராமத்திற்குப் போன போது, காலை நேர ஏகாந்தத்தைக் கண்ணார அனுபவிக்க வீட்டு மொட்டை மாடிக்குப் போனேன்... கருவேல மரங்கள் நிறைந்த எங்கள் ஊர் ஏரி, பசுமை இழந்தக் கைம்பெண்ணாகக் காட்சியளித்தது. சிலபல வருடங்களுக்கு ஒருமுறை ஏரிமரங்களை ஏலம் விட்டு வெட்டுவார்கள். என் நினைவறிய மூன்று நான்கு முறை அரங்கேறியிருக்கிறது இந்த மரம் வெட்டுதல்! அந்த முதல் மர வெட்டுதலுக்கு முன் சில வருடங்கள் நட்பின் முதல் ஸ்பரிசத்தோடு என் நினைவில் என்றும் பசுமையோடு இருப்பவை. ஒவ்வொரு மர வெட்டுதலும் என் கண்முன் அந்த சில வருடங்களைக் காட்சியாக்கி விட்டுப் போகும். அது பள்ளி, வீடு, விடுமுறை, விளையாட்டு.. இவைத் தவிர வேறு அறியாத நட்புக் காலம்..! மீண்டும் அந்த நட்புக்காலத்தைத் தரிசிக்க நடந்தேன்.. கருவேல ஏரியை நோக்கி.. தரிசனம் வரிவடிவாக...]
 விடுமுறையின் ஒவ்வொரு வினாடியும் விழாக்காலம்..
வீட்டு வாசல்.. விளையாடும் வேப்பமர நிழல்...
இங்கே தான் தொடங்கும் எங்கள்
பூவா தலையா ஆட்டம்..!
ஏரிக்கரைக்குப் போகும் வயல்வெளி வரப்புகள்
வீட்டு வாசலின் முன்னே..
ஏரியிலிருந்து ஆற்றில்போய் சேரும் ஏரிக்கால்வாய்
வீட்டுக்குப் பின்னே..!!

இப்போது இல்லாமல் போய்விட்ட
இந்த ஏரிக்கால்வாய்தான் எங்கள்
அப்போதைய விளையாட்டுச் சொர்க்கம்..!!
கால்வாய் நீரை ஒட்டியபடி இருந்த மரப்பாலம்
கால் நனைத்தவாறு கனவுகளை அரங்கேற்றிய மேடை..!
வரிக் கேட்கவில்லை யாரும்
எங்கள் கனவுகளுக்கும் கப்பல்களுக்கும்...
வருடஞ்சென்றப் புத்தகப் பக்கங்கள்
கப்பல்களாகி எங்கள்
கனவுகளை சுமந்துச் சென்றன..
அந்த ஏரிக் கால்வாயில்..!
கால்வாய்க்கரைப் புளிய மரம் வெண்குடையானது..
சின்னஞ்சிறு மரப்பாலம் சிம்மாசனமானது...
கவலையின்றிக் கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தோம்
கால்களை உரசிப்போன மீன்களுக்கு!!
கால்வாய்த் தடம் கடந்துப் போனேன் ஏரிக்கரைக்கு..
மஞ்சள் பூக்கள் பஞ்சுப் பஞ்சாய்ப் பூத்திருக்கக்
 கொஞ்சி அலைப்பேசும் கருவேல ஏரி ஒருபுறம்...
தும்பிகள் விளையாடும் வயல்வெளிகளும்
வெயில் புகாதத் தோப்புகளும் மறுபுறம்..
நடுவில் நீண்ட ஏரிக்கரையில்
நாளும் நடந்தன எங்கள் இராஜ பவனிகள்..!!
நாங்கள் முடிசூடிக் கொண்டக்
காட்டு மல்லியின் வேர்கள்..
இன்னும் மிச்சமிருக்கலாம்..
எரிக்கரைக் கல்லுக்கட்டு இடுக்கில்..!!
வாசம் இன்னும் மிச்சமிருக்கிறது...
எங்கள் நாசிகளில்..!!
வீட்டு மல்லியில் வாசமில்லையென அழுதுக்
காட்டு மல்லியை மடிகட்டி
வீட்டுக்குக் கொண்டு வந்த வாசம்..!
திசைமாறிப் போன பின்னும்
சுவாசத்தில் மறையாத வாசம்..!!
கரையில் மேயும் வெள்ளாடுகளுக்கு ஊட்டிவிட
கருவேலங்காய்களைப் பறிக்கப் போய்
கைகளில் தைத்த முட்காயங்கள்..!
‘கொக்கே கொக்கே பூப்போடு!’ என
இல்லாதப் பூவை இட்டுப் போகுமென
இறைஞ்ச வைத்தக் கொக்குக் கூட்டங்கள்..!
தண்ணீரில் மூழ்கிப் பின் தலையை நீட்டி
அங்கே இங்கே எனக் கண்ணாமூச்சி ஆடி
நீந்தியத் தண்ணீர்த் தாரைகள்..!

இன்றுக் காலத்தால் மறைந்து போனவற்றை
அன்றுக் கண்களால் படமெடுத்துக் கொண்டோம்..!

கரையோர செல்லியம்மன் கோயில் அத்திமரத்தடியில்
கரையாமல் புதைந்துக் கிடக்கலாம்
கடைசியாக நாங்கள் பல்லாங்குழி ஆடிய
ஆமணக்குக் கொட்டைகள்..!!
மரக் கிளையின் மறையாதத் தழும்புகளில்
எங்கள் ஊஞ்சல் கயிற்றுத் தழும்பும் இருக்கலாம்..!!
தலையைத் தட்டிப் பறக்குமிந்தத் தட்டாம்பூச்சி
நாங்கள் விரட்டி விரட்டிப் பிடித்தத்
தட்டாம்பூச்சியின் பேரனாக இருக்கலாம்..!!
நீர்வடிந்த ஏரிக்கோடியில்..
காய்ந்த நீர்ப்பாசி விரித்த வெண்கம்பளத்தில்..
கொலிசுகள் சத்தமிட..
பாவாடை சரசரக்க...
நாங்கள் பதித்தக் கால்தடங்களைத் தேடுகிறேன்..!
புழுதிப் படிந்த இந்த மண்ணுக்குள்...
தொலைந்துப் போன எங்கள் கொலுசின்
முத்துக்களும் இருக்கலாம்..
எங்கள் கால்களைத் தைத்தக் கருவேல
முட்களும் இருக்கலாம்..
இதோ... இந்த ஏரி மண்ணுக்கடியில்தான்...
மறைந்துக் கிடக்கும் கருவேல வேர்களைப் போல..
புதைந்துக் கிடக்கிறது...
தேவதைகள் ஆண்ட ஒருக்காலம்..
எங்கள் நட்புக்காலம்..!!

Monday, August 1, 2011

கனவில் வந்தக் கடவுள்!


மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை விடியல். வழக்கமாக ஊருக்குப் போகும் வெள்ளிக்கிழமைகளைப் போலவே இன்றும் பளிச்சென விடிந்தது. தொழில்நுட்பக் கல்வி முடித்து, மென்பொருள் கனவுகளோடும், ஐந்திலக்க ஆரம்பச் சம்பளத்தோடும், சொந்த ஊரை விட்டுச் சென்னையில் குடியேறிய பல லட்சம் பேரில் நானும் ஒருத்தி! மூன்று வருடங்களில் சென்னை வாழ்க்கையோடும், மென்பொருள் நாகரிகத்தோடும் பொருந்தி விட்டிருந்தாலும், சொந்த ஊருக்குப் போகும் நாளில் வரும் உற்சாகமேத் தனிதான். முடிந்த அரையாண்டுக்கான சம்பள உயர்வில் வீட்டில் எல்லோருக்கும் எதையாவது வாங்கிப் பெட்டியில் அடுக்கியும் ஆயிற்று. அம்மா சொன்னபடி ஒரு நூறு ரூபாய் உண்டியலுக்காக எடுத்துத் தனியேக் கைப்பையில் வைத்தேன்.
      இதோ மாலையும் வந்து விட்டது. இழுவைப் பெட்டியும் பையுமாக எழும்பூர் இரயில் நிலையத்தை அடைந்தேன். இன்னும் இரயில் புறப்பட ஒரு மணி நேரமிருந்தது. முதல் நடைமேடையிலேயே அமர்ந்தேன். இரயில் நிலைய நடைமேடைகள் சுவாரசியமான நாடக மேடைகள்!! பலவித மக்கள்.. மாறுபட்ட நடை உடை பாவனைகள்.. எத்தனையோ முகமூடிகள்.. வித்தக ஒப்பனைகள்.. எல்லாமும் ஒரே நேரத்தில் அரங்கேறுவது இங்கேதான்! கண்களை அலையவிட்டு, செவிகளைத் தீட்டிக் காத்திருந்தேன்.. இன்றைய சுவாரசியத்திற்காக..
      சிறிது நேரத்தில் எனக்கு அடுத்தக் கல்மேடையில் அயர்வுடன் வந்தமர்ந்தார் ஒரு முதியவர். அவரது சிவப்புச் சட்டையும், மங்கிய வேட்டியும், தோளில் கிடந்தத் துண்டும், அவர் ஒரு இரயில் நிலைய சுமைதூக்கி என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டின. இரண்டு நிமிடங்கள் கண்களை அமர்ந்திருந்தவர் திடீரெனத் தவம் கலைந்தவராய் வெகு வேகமாக அருகிலிருந்த நீர் குழாயிடம் சென்றார். முகத்தை நீரால் அழுந்தத் துடைத்து விட்டு, அதே குழாய் நீரை தாகத்தோடு அருந்திவிட்டு நுழைவாயிலருகே ஓடினார்.
      ஏதோ உணர்வு உந்த, மனதில் தோன்றியப் புரியாத சிறு வலியுடன் அவரையேக் கவனித்தேன். போவோர் வருவோரிடமெல்லாம், “சார்.. பெட்டி..”, “மேடம்.. பெட்டி..” என்றுச் சுமைதூக்கக் கெஞ்சிக் கொண்டிருந்தார் அந்தச் சுமைதூக்கி!
      இழுவைப் பெட்டிகள் நாகரிகமாகிப் போன இந்நாளில், சுமைதூக்கிகளின் தேவைக் குறைந்துதான் போயிற்று என்ற எண்ணம் ஓடியது. எங்கிருந்தோ வந்தான் அந்தச் சிறுவன், பத்து வயதிருக்கும். நேரே அவரிடம் வந்து “தாத்தா!” என்றான். திரும்பியவர் பரிவோடு அவனிடம், “என்னடா, இங்கே எதுக்கு வந்தே?” என்றார். ‘பேரன் போல’ என்று நினைத்தவாறே உரையாடலை உற்றுக் கவனித்தேன்.
      “அம்மாதான் அனுப்பிச்சு தாத்தா! வீட்டுல அரிசி இல்லயாம், உங்கக்கிட்டக் காசு வாங்கி அரிசியும் ஆயாவுக்குக் கஞ்சி காய்ச்ச ஆரியமும் வாங்கிட்டு வர சொன்னிச்சு. காசு கொடு தாத்தா!” என்றான். “கொஞ்சம் இங்க உட்காருடா.. காசு இன்னும் வாங்கல.. யாரும் பெட்டித் தரல.. எப்படியாது சீக்கிரம் வாங்கித் தரேன்” என்றவர் சொன்ன போது.. இயலாமையின் வலி அவர் முகத்தில் மின்னி மறைந்தது, ஒரு பெருமூச்சோடு!
      மீண்டும் அங்கும் இங்கும் அலையத் தொடங்கினார். சில நிமிடங்கள் கரைந்தது. ஒரு முடிவோடு என் இழுவைப் பெட்டியின் நீளப் பிடியை மடக்கி விட்டு எழுந்தேன். சற்றுத் தொலைவில் அலைந்துக் கொண்டிருந்தவரை ‘தாத்தா’ என உரக்க அழைத்தேன். விரைவாக ஓடி வந்தவரின் கண்களில் தெரிந்தது எதிர்பார்ப்பா, நிம்மதியா, வலியா, சந்தோஷமா?- இனம் காணத் தெரியவில்லை. பெட்டியைக் கொடுத்து “ஏழாவது ப்ளாட்ஃபார்ம்-ஏ1-45, எடுத்து வருவீங்களா?” என்றேன். மிக வேகமாக “வாங்க மேடம்” என்றவாறே பெட்டியைத் தூக்கினார். அவர் நடையில் முதுமையும், உழைப்பின் உரமும் ஒன்றாகத் தெரிந்தது.
      வேகமாக இருக்கையை அடைந்தவர், பெட்டியை நிதானமாக இருக்கைக்கடியில் வைத்தார். கைப்பையில் இருந்த உண்டியல் காசு நூறு ரூபாய் தாளை எடுத்து அவரிடம் நீட்டினேன். “சில்லரை இல்லைங்க மேடம்” என்றார். “இல்லைன்னா பரவால்லே, வச்சுக்கோங்க!” என்றேன். “அய்யய்யோ! வேண்டாங்க மேடம். உழைப்புக்கு மீறின ஊதியம் தங்காது, அது பாவம்!  ஒரு இருபது ரூபாய் இருந்தாத் தாங்க” என்றார். இரண்டு பத்து ரூபாய் தாள்களை அவரிடம் நீட்டி விட்டு எனதுப் படுக்கையில் படுத்தேன். சற்று நேரத்தில் இரயில் கிளம்பியது, அதன் தாலாட்டில் கண்ணயர்ந்தும் போனேன்.
      எவனோ ஒருவன் அருகில் வந்தான்.. “நன்றி!” என்று சிரித்தான். “யார் நீ? எதற்கு நன்றி?” எனக் கேட்டேன். “நான்தான் கடவுள்! நன்றி நீ கொடுத்த கஞ்சிக்கு!” என்றான். “நான் எப்பொதுக் கொடுத்தேன் கஞ்சி?” எனக் கேட்டேன். “கஞ்சிக்குக் காசுக் கொடுத்தாயே... மறந்து விட்டாயா? இருபது ரூபாய்..” சிரித்தான் கடவுள்.
      திடுக்கிட்டுக் கண் விழித்தேன்...! அட... கனவு..! எத்தனையோ நூறு ரூபாய்களைப் போட்டிருக்கிறேன் உண்டியலில்.. அன்றெல்லாம் வராதக் கடவுள்.. இன்று மட்டும் ‘நன்றி’ எனச் சிரிக்கிறான்..??!! நேரம் நடுநிசியைத் தாண்டி இருந்தது. இரயிலின் தடதடப்போடு... நெஞ்சமும் தடதடத்தது.. ‘இந்நேரம் அந்த சுமைதூக்கி வீட்டில் எல்லோரும் கஞ்சியாவது குடித்திருப்பார்கள்!!!’