Wednesday, September 7, 2011

பாடாத ஒரு பாடல்..!


கற்றை நிலவொளியில்
சிந்தும் சிறு மழையில்
ஒற்றை மின்னலின் நுனியில்
மெல்லக் கசிந்தது அப்பாடல்..!
கள்வாழைப் பூவில்
கலந்தாடிச் சிவந்து
கசிந்துருகிய ஒற்றைத் துளியில்
கரைந்துயிர்த்து எழுந்தது அப்பாடல்..!
பாராமல் பார்த்து
சேராமல் தாழ்ந்த நம்
விழியீர்ப்பு விசைகளில்
விருத்தம் தேடி நுழைந்தது அப்பாடல்..!
ஒட்டாமல் உரசிய நம்
ஒற்றை விரல்களின் உராய்வில்
ஒற்றிய ஸ்வரத்தைத்
தனதாக்கித் தவழ்ந்தது அப்பாடல்..!
நீண்டதொரு இரவில்
நீளாததொரு கனவின்
மீளாததொரு வெளியில்
காணாமல் கரைந்தது அப்பாடல்..!
தின்றாலும் தீராத ஒரு பாடல்..
கொன்றாலும் சாகாத ஒரு பாடல்..
என்றாலும்...
பாடாத ஒரு பாடல்..!!!

No comments:

Post a Comment