Wednesday, April 14, 2010

தமிழர் என்றோர் இனமுண்டு..

நகரத்தோடு வாழ்க்கை ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டு...
மென்பொருள் நாகரீகத்தில் பங்கு போட்டுக் கொண்டு...
மின்னஞ்சல்களுக்குப் பின்னே மிக வேகமாகத் தொலைந்து கொண்டிருந்தாலும்...
ஏதாவது வாரக் கடைசிகளில் என்னை நானே மீட்டுக் கொள்ள
எனது சொந்த ஊருக்குச் செல்வதுண்டு...
அந்த வாரமும் அப்படிதான்...
கோடையின் கொடுமை சென்னையில் தொடங்கியிருந்தது...
கிராமமும் ஒன்றும் குளுமையாக இல்லை...
ஆனால் இளைப்பாறத் தோப்புகள் இருந்தன...
தென்னந்தோப்பில் இளநீரை ருசித்தபடி உட்கார்ந்திருந்தேன்...
அந்த தோப்பின் ஒரு மூலையில் ஒரு குடிசை உண்டு...
யாரோ ஒரு முதியவரும் அவர் மனைவியும் அங்கே இருப்பார்கள்...
யாரென்று தெரியாது...
ஆனால் நான் போகும்போதெல்லாம் நேசத்தோடு நலம் விசாரிப்பார்கள்.
அந்த அம்மாவுக்கு காது சரியாகக் கேட்காது.
அன்று அந்த முதியவர் எங்கோ வெளியே சென்றிருந்தார் போல..
காலை நேரம் முடியும் முன்னே வெயில் சுடத் தொடங்கி இருந்தது..
அந்த அம்மா குடிசைக்குள் சமைத்துக் கொண்டிருந்தார் போல..
வெளியே சென்றிருந்த முதியவர் களைப்புடன் வந்து செருப்பைக் கழற்றினார்..
திடீரென்று எதைப் பார்த்தாரோ தெரியவில்லை...
கழற்றிய செருப்பைக் கூடப் போடாமல்
சுடும் வெயிலில் காட்டு வரப்பில் ஓடத் தொடங்கினார்..
ஒன்றும் புரியாமல் எங்கே ஓடுகிறார் எனப் பார்த்தேன்...
காட்டில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு
உடனிருந்தக் குட்டிகளை கையில் தூக்கிக் கொண்டுக் குடிசையை நோக்கி ஓடி வந்தார்...
தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்ததும்
குட்டிகளைக் கீழே விட்டு சொன்னார்...
"ஓடு சாமி...தண்ணிக் குடிங்கடா ... ரொம்ப சுட்டுடுச்சா கண்ணுங்களா.."
குட்டிகளும் துள்ளித் துள்ளி அவரை சுத்திக் கத்திக் கொண்டே
தண்ணீர் தொட்டிக்கு ஓடின...

இன்னமும் ஏதேதோ சொன்னார்...
ஆனால் அதற்கு மேல் வார்த்தைகள் ஏதும் காதில் விழ வில்லை
அவர் குரலில் இருந்த குற்ற உணர்வும் பாசமும்
நினைவை விட்டு அகலவே இல்லை!
" தமிழர் என்றோர் இனமுண்டு.. தனியே அவர்க்கோர் குணமுண்டு!"
இந்த வரிகளை எழுதியவன்...
கண்டிப்பாக அதற்குமுன் தமிழ் கிராமங்களுக்கு சென்றிருப்பான்...
இவரைப் போன்றவர்களைக் கண்டிருப்பான்..!!

2 comments: