Friday, April 23, 2010

நேசித்தலும் நேசிக்கப்படுதலும்..!!

அமைதியான அதிகாலைப் பொழுதில்
அரை மணி நேரப் பேருந்துப் பயணம்..
அங்கொருவரும் இங்கோருவருமாய்
அரைகுறைத் தூக்கத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தனர்..
நிறுத்தமொன்றில் பேருந்து நிற்க
எதையோ கைப்பற்றி விட்ட குதூகலத்துடன்
படிகளைப் பற்றி ஏறினாள் பாவையவள்...
ஐந்து வயதுதான் இருக்கும்..
ஏறிய வேகத்தில் ஓடி வந்து ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள்..
மூச்சு வாங்கக் கூவினாள்...
"அண்ணா அண்ணா இங்க வா.."
அம்மாவின் கையைப் பிடித்தபடி வந்தான் அண்ணன்..
அண்ணனுக்கோ ஜன்னலோர இருக்கை மீது ஆசை போல..
"அபி அபி... நான் அங்கே உக்கார்ரனே..."
என்று கெஞ்சலும் கொஞ்சலுமாகக் கேட்டான்..
அந்த அபியும் செல்லக் கோபத்துடன் நகர்ந்து கொண்டாள்...
 அம்மா சில ரொட்டித் துண்டுகளை இருவருக்கும் கொடுத்தாள்...
அபி அவசர அவசரமாகத் தன் கையில் இருந்ததை சாப்பிட்டாள்..
அண்ணனோ அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அபி கேட்டாள்... "அண்ணா...இன்னும்..."
அவன் மொத்தத்தையும் அபிக்கே கொடுத்து விட்டு
சிரித்தபடியே சின்னதாய் ஒரு முத்தமும் கொடுத்தான்..
அபிக்கு ஜன்னலோரம் பிடிக்காமலும் இல்லை ..

அண்ணனுக்கு ரொட்டித் துண்டின் மேல் வெறுப்பும் இல்லை...
அவர்கள் இன்னும் வளரவில்லை.. வருத்தமும் இல்லை...
விவரம் தெரியவில்லை... விட்டுக்கொடுத்தலும் இல்லை...
நாம் வளர்ந்துவிட்டதாலோ என்னவோ...
அவர்களுக்கு புரிந்தது நமக்கு தெரியவில்லை...
உலகின் இரண்டு அரும்பெரும் சந்தோஷங்கள்...
நேசித்தலும் நேசிக்கப்படுதலும்..!!

1 comment: