Monday, April 19, 2010

தமிழும் தாலாட்டும்...

இந்த வார விடுமுறை...
சென்னை வெயில் பயமுறுத்தியது...
கூட்டைத் தேடும் குருவியாய்
வீட்டுக்கு ஓடினேன்...
வராமல் தொலையக் கூடாதா
என்று நினைக்க வைக்கும் கடன்காரனாய்
வந்து தொலைந்தது ஞாயிறு இரவு...
அரை மனதோடுக் கிளம்பிக் கொண்டிருந்தேன்...
பத்தரை மணிக்கு பேருந்து...
சென்னைக்குத் திரும்ப...
ஐந்து மாதமே ஆன அண்ணன் மகன் அழுது கொண்டிருந்தான்...
அவனை சமாதானப்படுத்தித் தூங்க வைக்க...
அம்மா பாடிக் கொண்டிருந்த தாலாட்டு
அரைகுறையாய்க் காதில் விழுந்தது..
"அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே...
 மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூச் செண்டாலே...
தாத்தா அடிச்சாரோ தாழம்பூச் செண்டாலே..."
பலமுறைக் கேட்ட வரிகள்தான்...
புன்னகையோடுக் கேட்டுக் கொண்டே
எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்...

பலமுறைக் கேட்டிருந்தாலும் இன்று ஏனோ...
பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னும்
தாலாட்டு வரிகள் மனதோடு இசைந்துக் கொண்டிருந்தன...
தூங்க வைக்கும் தாலாட்டில்...
அத்தையும் மாமனும் தாத்தாவும்...
இன்ன பிற புரியாத உறவுகளும் ஏன்??
எந்தக் குழந்தைக்குப் புரியப் போகின்றன இந்த உறவுகளெல்லாம்??
கொஞ்சம் நான் தாலாட்டு கேட்ட நினைவுகள் நிழலாடின...
அன்று எனக்கும் எதுவும் புரிந்ததில்லை...
இன்று வரை சிந்தித்துக் கூட பார்த்ததில்லை...
பின் எதற்கு தாலாட்டில் உறவுகள்... தேவையில்லாமல்??
என்ன தாலாட்டோ... கேட்க நன்றாயிருக்கிறது... வேறோன்றுமில்லையதில்...
சுரத்தின்றி யோசனை ஓடுகையில்...
திடீரென்று தோன்றியது...
'அடடே... சித்தி கொடுத்தனுப்பிய பணியாரம்

நன்றாயிருந்ததே... சித்தியிடம் சொல்லவே இல்லையே...'
கைப்பேசியை எடுத்து சித்தியிடம் கொஞ்சம் கொஞ்சி விட்டு...
அவர்களின்....'கவனம்...பார்த்து போயிட்டு வாம்மா...'
எல்லாம் கேட்டு விட்டு கைப்பேசியை அணைத்தால்...
தொடர்ந்து வந்தது மாமாவின் அழைப்பு...
மீண்டும் அதே 'கவனம்...பார்த்து போயிட்டு வாம்மா...'
பேசி முடித்து இருக்கையில் சாய்ந்தேன்...
பேருந்து புறப்படத் தயாராக இருந்தது...
மனது மெதுவாகக் குரல் கொடுத்தது...
தாலாட்டில் உறவுகள் ???
தசையோடு தாய் கலந்திட்ட உணர்வுகள்...
புரியாமல் போயிருந்தாலும்...
பிரியாமல் தொடரும் பந்தங்கள்...
தேவையான எல்லாம் வாங்கலாம் சென்னையில்....
எதைத் தேடி ஓடி வருகிறேன் எதுவுமில்லாத கிராமத்திற்கு??
என்றோக்  கேட்டத் தாலாட்டில்...
என் நரம்புகளோடு பின்னி விட்ட உறவுகளைத் தேடி..!!

பேருந்து சென்னையை நோக்கி புறப்பட்டது...
நானும் உறங்கத் தொடங்கினேன்..
பின் திசையில் தலாட்டைத் தேடியபடி!!

3 comments:

  1. chanceless dear
    i din hear thalaltu but ur poem made to feel dat i missed t :(

    ReplyDelete
  2. Thamizh ne eludhuna poems ellamae nallarku..
    Adhula the best poem idhu..

    Romba romba edharthama, elimaiya, inimaiya iruku...Arumai ...

    ReplyDelete
  3. Hey tamil... romba nalla iruku... intha eluthara palakatha vitudatha..
    antha thalatu patta na ketathila... atha mulusa inga konjam poda mudiyuma?

    ReplyDelete